டான் குயிக்ஸாட்டின் விநோத மிருகம்


ஐரோப்பாவின் முதல் நவீன நாவல் டான் குயிக்ஸாட் (Don Quixote). இதன் ஆசிரியர் மிகெல் டி செர்வாண்டிஸ் (Miguel De Cervantes). இவரை ஐரோப்பிய நவீன இலக்கியத்தின் முன்னோடி எனக் கொண்டாடுகிறார்கள். 1604ஆம் ஆண்டு வெளிவந்த இந்த ஸ்பானிய நாவல் அதுவரை இருந்து வந்த நெடும்புனைவுகளுக்கு மாற்றான வாசிப்பனுவம் தந்தது. போர்கள், வீர சாகசங்களைக் கிண்டலுடன் விவரித்தது. இந்த நாவல் அன்றைய ஐரோப்பா இலக்கிய உலகத்தில் கொண்டாடப்படத் தொடங்கிய அதேநேரத்தில் செர்வாண்டிஸ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்னாலும் இரண்டுமுறை அவர் சிறைத்தண்டனையை அனுபவித்திருக்கிறார். கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டு அல்ஜீரியாவில் சிறைக் கைதியாகவும் அடிமையாகவும் இருந்த அனுபவமும் அவருக்கு உண்டு.
...
மிகெல் டி செர்வாண்டிஸ் 1547ஆம் ஆண்டு ஸ்பெயினின் மாட்ரிடில் பிறந்தவர். இவரும் பெரும்பாலான எழுத்தாளர்களைப் போல் முதலில் கவிதைகளைத்தாம் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து சொற்களுடனான தன் போரை விட்டுவிட்டு நிஜமான ஒரு போரைச் சந்திக்கச் சென்றார். எழுதுகோலை விட்டுவிட்டு ஆயுதங்களைக் கையில் எடுத்தார். இத்தாலியில் இருந்த ஸ்பானிஷ் ராணுவப் பிரிவில் வீரனாகச் சேர்ந்தார். லெப்னட்டோ போரில் (Battle of Lepanto) செர்வாண்டிஸ் ஸ்பானிஷ் படைப் பிரிவின் சார்பாகப் போர் புரிந்தார். அது நடந்தது 1571ஆம் ஆண்டில். இப்போரில் செர்வாண்டிஸ் படுகாயம் அடைந்தார். அவருடைய இடதுகை காயத்தால் முழுவதும் செயலிழந்து போனது.

1575ஆம் ஆண்டு செர்வாண்டிஸும் உடன் போர் புரிந்த அவருடைய தம்பி ரோட்ரிக்கோவும் உடல் பலவீனமானதால் ஸ்பெயின் திரும்ப முடிவெடுத்தனர். அவர்கள் திரும்பும்போது கடற்கொள்ளையர்களால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். பிறகு அவர்கள் அல்ஜீரியாவில் அடிமையாக விற்கப்பட்டனர். அவர்களுடைய பெற்றோர் செர்வாண்டிஸையும் ரோட்ரிக்கோவையும் மீட்கப் பெரிதும் முயன்றனர். அவர்களுடைய உடைமைகளையும் சொத்துகளையும் விற்றனர். பலரிடமும் கடன் கோரிப் பெற்றனர்.

பெற்றோரின் விடா முயற்சியின் விளைவாக செர்வாண்டிஸின் தம்பியாகிய ரோட்ரிக்கோ (Rodrigo) 60 பொற்காசுகளுக்கு (60 Ducats) 1577ஆம் ஆண்டும் விடுவிக்கப்பட்டார். செர்வாண்டிஸுக்கு அவர்கள் 250 பொற்காசுகளைத் தொகையைப் பிணயமாகச் செலுத்தச் சொன்னார்கள். அவர் செய்த பெரும் பாவம், ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டதுதான். அதுவும்  ஸ்பானிஷ் அரசர் இரண்டாம் பிலிப்பின் (Philip II) மூன்றாவது மனைவி எலிசபத் மறைவுக்குப் பிறகு அவர் குறித்து 1569ஆம் ஆண்டு எழுதிய நினைவஞ்சலிக் கவிதைகளுக்காக அவருக்கான பிணயத் தொகை அதிகரிக்கப்பட்டது. அரசர் காசு கொடுப்பார் என நினைத்து கொள்ளையர்கள் பிணயத் தொகையை அதிகரித்திருப்பார்கள். ஆனால் செர்வாண்டிஸின் பெற்றோர்கள்தான் அந்தத் தொகையைச் செலுத்தினர். அதற்கு அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் ஆனது.

விடுவிக்கப்பட்டு ஊர் திரும்பியும் அவரையும் அவர் தம்பியையும் விடுவிக்க அவர் குடும்பம் பெற்ற கடன் சுமை அவர் மீது விழுந்தது. உடைமைகள் எல்லாம் விற்கப்பட்டிருந்தன. கடனை அடைப்பதற்கான உடல் வலிமையை சிறைவாசம் காரணமாக இழந்திருந்தார். அதனால் அவர் ஒரு யோசனைக்கு வந்தார். இயல்பிலேயே எழுத்தார்வம் இருப்பதால் நாடகங்கள் எழுதலாம் என முடிவுசெய்தார். அந்நாட்களில் ஸ்பெயினில் நாடகங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. அதனால் நாடகங்களில் பணிபுரிபவர்களின் நல்ல வருமானம் கிடைத்தது. செர்வாண்டிஸும் மேடை நாடகங்களுக்குக் கதை எழுதினார். நாட்டுக்குத் திரும்பிய 1580ஆம் ஆண்டிலே தன்னுடைய சிறை அனுவங்களை வைத்து இரு நாடகங்களை - El Trato de Argel (The Treaty of Algiers), Los Baos de Argel (The Baths of Algiers) - எழுதினார். அதன் மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கும் என நினைத்தார். ஆனால் அவரது நினைப்பு நனவாகவில்லை. இரு நாடகப் பிரதிகள் மட்டுமே மேடை ஏறின. எழுத்தை நம்பி வாழ முடியாத சூழலே அவருக்கும் வாய்த்தது.

வேலைக்குச் செல்ல வேண்டியதுதான் என முடிவுக்கு வந்தார். அப்போது வேலை கிடைப்பது கொஞ்சம் எளிதான காரியமாக இருந்திருக்க வேண்டும். ஸ்பானிய படைகளுக்கான உணவுப் பொறுப்பாளராகப் பணியாற்ற வேலை கிடைத்தது. கிராமம் கிராமமாகச் சென்று உணவுப் பொருள்களைப் பெற்றுத் படைப்பிரிவுக்குத் தர வேண்டும். அது ஒரு பிரயோஜனம் இல்லாத வேலை. அதை வெகுதாமதமாகத்தான் செர்வாண்டிஸ் தெரிந்துகொண்டார். அதற்குள் சில பிரச்சினைகள் எழுந்தன. செர்வாண்டிஸ் உணவுப் பொருளைக் கையாடல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். 
...

சிறையில் இருந்து திரும்பிய பிறகு இனி வேலை பார்க்கக் கூடாது. முழு நேர எழுத்தாளனாக இருக்க நினைத்தார்.  ஆனால் தினப்பாடுக்கு அவர் பெரும்பாடு பட்டார். 1585ஆம் ஆண்டு செர்வாண்டிஸ் தன் முதல் குறுநாவல் லா கலடியாவை (La Galatea) கொண்டுவந்தார். ஒரு கிராமத்துக் காதலைச் சொல்லும் அந்த நாவல் வரவேற்பைப் பெறவில்லை. 

1604ஆம் ஆண்டின் இறுதியில் செர்வாண்டிஸ் தன் புதிய நாவலான டான் குயிக்ஸாட்டை (முதல் பகுதி - El ingenioso hidalgo don Quijote de la Mancha) எழுதி முடித்தார். அதன் எழுத்துப் பிரதியைத் தனக்கு நெருக்கமானவர்களுக்கும் அனுமதிக்காக அரச பொறுப்பிலிருப்பவர்களுக்கும் கொடுக்கிறார். 26-செப்டம்பர்-1604ஆம் நாளில் வல்லோடொலிட் அரசவை அதிகாரிகளால் நாவலை அச்சடிக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. 1605ஆம் ஆண்டு தொடக்கத்திலே டான் குயிக்ஸாட்டின் முதல் பதிப்பு வெளிவருகிறது. அதை அச்சிட்டபோதும் விற்பனைக்குக் கொண்டுவந்தபோதும் நாவலாசிரியர், பதிப்பாளர் இருவருக்குமே அது வெற்றி பெறும் என்பதில் பெரிய நம்பிக்கை இல்லை. 

ஆனால் நாவல் பெரும் வரவேற்பைப் பெற்று, விற்பனை துரிதமடைகிறது. அருகிலிருக்கும் அரகான் நாட்டிலும் போர்ச்சுகல் நாட்டிலும்கூட நாவலை அச்சடிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படுகின்றன. 1605ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத வாக்கில் நாவல் ஏறத்தாழ ஐந்து பதிப்புகளைக் கண்டிருந்தது. நாவலின் வெற்றியைத் தொடர்ந்து அவர் இந்நாவலை அடுத்தடுத்த பாகங்களில் நெடும் புனைவாகத் தொடர்ந்து எழுத நினைத்து அயராது இயங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய துருதிஷ்டம் விடவில்லை.


1605ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வல்லாடிலோட் நகரத்தில் எஸ்குய்வா (Esgueva) ஆற்றுப்பாலத்துக்கு அருகில் கத்தோலிக்க ராணுவத்தைச் சேர்ந்த டான் கஸ்பார் டி எஸ்பிலிட்டா (Don Gaspar de Ezpaleta) என்னும் தளபதியை அடையாளம் தெரியாத இருவர் வாளால் தாக்கிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே யாரோ வருவதைக் கண்டு அந்த இரு நபர்களும் தப்பிச் சென்றனர்.

கஸ்பாரின் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கஸ்பார் உதவி வேண்டி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த குடியிருப்பு ஒன்றின் அருகில் வந்து விழுந்து வேதனையில் கத்தினார். அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த செர்வாண்டிஸ் காயம் அடைந்த அந்த மனிதர் வலியால் துடித்த குரலைக் கேட்டு வழிப்போக்கன் ஒருவன் துணையுடன் கஸ்பாரைத் தூக்கிச் சென்று வீட்டிற்குள் கொண்டுவந்தார். அவனைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் முயற்சிகள் பலன் அளிக்காமல் கஸ்பார் இறந்தார்.

வல்லாடொலிட் நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியது. டி செர்வாண்டிஸூம், அவருடைய குடும்பத்தினரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். ஆக செர்வாண்டிஸூக்கு இது மூன்றாம் சிறைவாசம். அவருடைய புதிய நாவலுக்கு அங்கீகாரம் கிடைத்துவரும் வேளையில் அதை அனுபவிக்க முடியாமல் சிறைச்சாலையில் கிடந்தார் செர்வாண்டிஸ்.

நீதி விசாரணையின்போது இறந்துபோன கஸ்பார் செர்வாண்டிஸின் மகளையோ அவருடைய தங்கையின் மகளையோ விரும்பி இருந்ததாகவும் அதனாலேயே செர்வாண்டிஸ் கோபம்கொண்டு கஸ்பாரைக் கொன்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றக் காவலுக்குப் பிறகு செர்வாண்டிஸின் குடும்பத்தினருக்கு ஜாமீன் கிடைத்தது. வழக்கு விசாரணை முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லை என அவர்கள் விடுவிக்கப்பட்டனர். செர்வாண்டிஸின் நாயகன் கிஹாட்டி விநோத மிருகம் என நினைத்து காற்றாலையுடன் சண்டைபோடுவான். கேலிக்குரியதாக நினைத்த அந்தக் காட்சி செர்வாண்டிஸின் வாழ்க்கையுடன் பார்க்கும்போது உண்மையில் கேலியாகத் தோன்றவில்லை.

மிக்கேல் செர்வாண்டிஸின் டான் குயிக்ஸாட் தமிழில் சிவ. முருகேசனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சந்தியா பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.