கவிதை நிகழ்வது ஒரு உன்னதமான அனுபவமாகக் கருதுகிறேன். ஒரு மொட்டு அவிழ்கிறது என்ற செய்தியை ஒரு வாசனாகத்தான் உணரமுடிந்தது. "தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா" என்ற வரிகளின் அற்பதத்தை அறிய எத்தனை ஆண்டுகளாயிற்று!
மெழுகு தீபத்தின் ஒளியைப்போல் எண்ண அலைகள் பரவிக்கிடக்கும் என் தனிமை அறையில் ஒரு உயர்வு அழுத்தமாக அந்தப் பரசவம் நிகழ்கிறது, அது ஒரு பேரின்ப நிகழ்வு. அந்த நிலையை அதே பரவசத்தோடு வெளிபடுத்த முடிவதில்லை. என் வாசிப்புலகம் மிகச் சிறியதுதான். நான் அறிந்த எளிய வார்த்தைகளைத் தேடி எடுத்து கோர்க்க முயற்சிக்கிறேன். பெரும்பாலும் அது தோல்வியிலெ முடிந்திருக்கிறது. என்றாலும் எனக்குப் பிடித்த இந்தக் குழந்தை விளையாட்டை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.
எஸ் செந்தில்குமாரின் இந்தக் கவிதையில் அந்த உன்னததை நெருங்கினேன். ஒரு கவிஞனின் பார்வையில் பூ பூவாய் விரிகிறது. அந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
.........................

எழுதி முடித்த கவிதை வரியின்
பிரமிப்பில் தீராத மோகங்கொண்டு
யாருமறியாத மலை உச்சிக் கோவிலில்
படிகளில் ஏறி அமர்ந்திருந்த
மாலை வேளையினை இப்போது
ஞாபகச் சிப்பித் திறந்து காண்கிறேன்
யாருமே வாசித்திராத
அந்த கவிதையின் முதல் வரியினை
நகரத்தில் எரியத் தொடங்கிய
முதல் விளக்கிடம் சொன்னேன்
வெட்கம் குமிழ்குமிழால உடந்தபடி
கவிதையின் அடுத்தவரி அடுத்தவரி என
வாசிக்க எல்லா விளக்குகளும்
என்னிடம் கேட்டபடி
எரியத் தொடங்கியதை
யார் அறியக்கூடுய்ம்
என் கவிதை தவிர்த்து
...........................
திருப்பத்தில்
ராட்சஸப் பறவையென நின்றிருந்த
அந்த ஒற்றை மரத்தைப் பார்த்தேன்
கருநிறப் பறவையின் இறக்கையென
காற்றில் அசைகின்றன அதன் கிளைகள்
உடல் நிமிர்த்து
கழுத்து வளைந்து இரை தேடும் காட்சியாய்
அந்த ஒற்றை மரம் நின்றிருந்தது
அதன் இறக்கை
பாதை கடக்கும் சமயம்
என்னைக் கவ்விக் கொள்ளுமென
பயந்து நிற்கிறேன்
நெடுநாள் தண்ணீரற்று வறண்ட அதன் உடல்
மரக்கட்டையாயிருந்தது
காற்றை சுவாசிக்கும் கிளைகள்
ஏதோ ஒன்றை விழுங்கத் துடிக்கும்
பெரும் பசியோடு காத்திருந்தன
செம்மண் மேடுகளைத் தாவித்தாவி
ஏதுமறியா ஆட்டுக்குட்டிகள்
அந்த ஒற்றை மரத்தைக் கடந்துவந்தன
அம்மரத்தைப் பார்க்காமலேயே
.............................
சிறு பூச்சியை
அதன் இடத்திலிருந்து நாடு கடத்துகிறேன்
அங்கேயும் பறக்கிறது
நிற்கிறது
உட்கார்கிறது மரத்தின்மேல்
அதற்கான உணவைத் தேடுகிறது
குறிப்பாக
இன்னொரு நாடு கடத்தலுக்குத் தயாராகிறது
தன் இருப்பிடத்திலிருந்து
...............................
சிறுவன் சூரியனோடு விளையாடுகிறான்
கைக்கண்ணாடி ஒளிக்கற்றையை
பிறர் மீதும் பாய்ச்சும் ஆர்வம் பெருகி
தன் கையில் இரண்டாவது சூரியனையும் தக்கவைக்கிறான்
என் கண் கூசுகிறது
இரண்டு சூரியனின் ஒளி வாசமாய்
அவன் உடலில் படிகிறது
கடந்து செல்வோரை உஷ்ண வாசம்
தொற்றிக் கொள்கிறது அவன் உடலில் வழிந்து
என் காதுகளில் நிரம்புகிறது இரண்டு சூரியனின்
ஒளிக்கற்றை இரைச்சல்
பிறகு சூரியனை விடிவித்தால்
மேற்கொண்டு பயணிக்கலாமென நின்றிருந்தேன்.
சுரியன் கண்ணாடியிலிருந்து கண்ணாடிக்கு
தெருவிலிருந்து தெருவுக்கு
சிறுவனிடமிருந்து சிறுவனுக்கு என
நகர்ந்தபடி இருக்கிறது
..................................
இப்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில் மிக முக்கியமான படைப்பாளியான எஸ் செந்தில்குமார் இந்த வருடத்திற்கான "சுந்தரராமசாமி விருதுக்கு" (நெய்தல் அமைப்பு) தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
புகைப்படம் நன்றி : உயிர்மை பதிப்பக இணைய தளம்.