லட்சியங்கள் அற்ற அரசியலைச் சொல்லும் கவிதைகள்


பெருந்தேவி

பெருந்தேவியின் கவிதைகள் வெளிவரும் இந்தக் காலகட்டம் வெற்றிக்கும் தோல்விக்கும் அப்பாற்பட்டதாக ஆகியிருக்கிறது. உதாரணமாக கபாலியை எடுத்துக்கொள்ளுங்கள். கபாலி அளவுக்கு வேறு எந்த சமூக விஷயமும் இந்தளவு விவாதிக்கப்பட்டதில்லை என நினைக்கிறேன். இரு குழுக்களாகப் பிரிந்துகொண்டு விவாதிக்கிறார்கள்; சண்டையிடுகிறார்கள். உண்மையில் கபாலி வெற்றிப் படமா? தோல்விப் படமா? இதற்கான விடையை யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. இந்த நிலைதான் இலக்கியத்துக்கும். எந்த ஒரு படைப்பும் மதிப்பீட்டு ரீதியாக உள்வாங்கி பேசப்படுவதில்லை. ஒன்று அருமை. இலையென்றால் மொக்கை. இதைத் தாண்டி பெரிய அளவில் விமர்சனம் இல்லை.

சினிமாவில் சொல்லப்படுவதுபோல வாய்ப்பேச்சின் வழியாகவும் இன்று ஒரு கவிதையை, கதையை கொண்டுபோய்விட முடிகிறது. அதற்கு அந்தத் திராணி இருக்கிறதா என்பது இரண்டாம் பட்சம்தான். குறிப்பிட்ட சிலரின் எல்லாக் கவிதைகளும், கதைகளும் சிறப்பானவையாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த வாய்ப்பேச்சு போகிறபோக்கில் நடப்பதில்லை. திட்டமாகச் செயல்படுத்தப்படுவதாகவே நினைக்கிறேன். இதற்கெல்லாம் வெளியேதான் பெருந்தேவி இருக்கிறார். பெருந்தேவியின் கவிதைகள் இருக்கின்றன..


ஞானக்கூத்தன்
தமிழின் புதுக்கவிதை உருவாகி ஒரு எழுபது வருடங்கள் கடந்துவிட்டன. பாரதிக்குப் பிறகான வசன கவிதையின் முயற்சியின் ஒரு கிளையாக பிச்சமூர்த்தியைச் சொன்னால் அதன் மற்றொரு கிளை க.நா.சு.. புதுக்கவிதைக்கெனத் திண்ணிய இலக்கிணங்கள் இல்லாதபோது க.நா.சு. அதைத் திட்டமிட முயன்றார். கவிதையின் அலங்காரங்களை களைய வேண்டும். பிச்சமூர்த்தியின் பார்வை இதற்கு நேர் எதிராக இருந்திருக்கிறது . ஆனால் க.நா.சு.  என்னும் கிளையிலிருந்துதான் தமிழ்ப் புதுக்கவிதை தளிர்த்து வளர்ந்திருக்கிறது. அந்தக் கிளையின் சிறு இலையாக நான் இதை உணர்ந்து சொல்கிறேன்.


க.நா.சு.க்குப் பிறகான தமிழ்க் கவிதையின் தொடர்ச்சி ஞானக்கூத்தனின் வரவு விஷேசமானது. ஏனெனில்  புதுக்கவிதைகளில் தீர்க்கமான அரசியலை, அங்கதத் தெறிப்புகளைத் தொடங்கிவைத்தவர் அவரே. அல்லது இவ்வளவு பெரும்பரப்பில் அதைச் செய்து காட்டியவர் அவர்தான். காலமேகப் புலவர், ஒளவையின் தனிப் பாடல் திரட்டு போன்றவற்றை மரபில் இவருக்கு முன்பாகச் சொல்லாலம்.  ழாக் பிரவரின் சொற்கள் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்பே ஞானக்கூத்தன் நிறைய எழுதியிருக்கிறார்.
ஆத்மாநாம்

ஞானக்கூத்தனுக்குப் பிறகு 70களில் ஒரு பெரும் படை கிளம்பி வந்தது. அதன் தொடர்ச்சி என ஆத்மாநாம், சமயவேல் ஆகியவர்களைச் சொல்லலாம்.


90களில் எழுதத் தொடங்கிய பெருந்தேவியின் கவிதைகளுக்கும் அந்தத் திராணி இருக்கிறது என நினைக்கிறேன். தன்மைப் பொருள் கவிதைகளிலும் இந்த எள்ளலை பெருந்தேவியின் கவிதைகள் கொண்டிருக்கின்றன.


90-களில் பெருந்தேவியின் முதல் கவிதை வெளிவருகிறது. சமீபத்தில் அவரது நான்காவது தொகுப்பு வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட இருபந்தைந்து ஆண்டுகள் அவரது கவிதை பயணித்திருக்கிறது. நம் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய செல்போன் போன்ற தகவல் புரட்சி 90களில்தான் அறிமுகமாகிறது. பெண்கள் தங்கள் உடலைக் கவிதைகளில் அறிவிக்கிறார்கள். ஒரு புதிய தலைமுறை வருகிறது. இதற்கிடையில் கவிதையிலும், வெளியிலும் நிகழ்ந்த மாற்றங்களை பெருந்தேவியின் கவிதை உள்வாங்கியிருக்கிறது. விளக்கு அணைக்கப்பட்ட அறையின் கணினி ஒளியை, செல்போன் கட்டணம் மலிவான பிறகு அதிகரித்த உரையாடல்களின் அலுப்பை, மின்னஞ்சல் அரட்டையை, ஃபேஸ்புக் கருத்துத் தெறிப்புகளை எல்லாம் இவரது கவிதைகளில் உணர முடிகிறது. 

சிலப்பதிகார நாயகி மதுரையை எரித்ததுபோல் பெருந்தேவியின் கவிதைகள் பேருருவாகச் சில இடங்களில் எழுகின்றன. சில இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பின் நாய்க்குட்டியாகவும் தன்மைப் பொருள் பேசுகின்றன. சில கவிதைகள் மரபின் தன்மையுடன் இருக்கின்றன. க.நா.சு., மரபுத் தன்மைகளைப் புதுக்கவிதையின் அம்சங்களாகப் பார்க்கவில்லை. ஆனால் பெருந்தேவி இதைத் திரும்பத் திரும்பப் பிரயோகித்துப் பார்த்திருக்கிறார்.



70களின் கவிதைகள், தொழில் நுட்பங்களுக்காக நிறைய மெனக்கிட்டது. மூன்று சொற்கள் பிரயோகிக்க வேண்டிய இடத்தில் ஒரு சொல்லைப் பிரயோகித்தார்கள். ஒரே சொல்ல உடைத்துப் பார்த்தார்கள். கச்சிதமான வடிவத்துக்குள் கொண்டு வந்தார்கள். இது ஆரோக்கியமான அம்சம்.  ஆனால் கட்டற்ற சுதந்திரத்தைக் கைவிட்டுவிட்டதோ என்னும் எண்ணம் எனக்குண்டு.  அப்படியான எண்ணம் வரக் காரணம் பெருந்தேவியின் கவிதைகள் எனலாம். அப்படியான ஒரு மாபெரும் சுதந்திரத்தை பெருந்தேவியின் கவிதைகளில் உணர முடிகிறது. கவிதையின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து அதை வெளிப்படுத்த அவர் வடிவத்தைத் தேர்ந்தெடுக்கிறார். வடிவங்களால் ஆனதல்ல கவிதை என்பதன் சாட்சியங்களாக அவர் கவிதைகளை உருவாக்கிக் காட்டுகிறார். கட்டற்ற சுதந்திரம் பெற்ற அவரது கவிதைகள் ஒரு இயல்புத் தன்மையுடன் இருக்கிறது.  இயல்பாகச் சிரிக்கின்றன. இயல்பாக பேசுகின்றன. இயல்பாகக்  கிண்டலடிக்கின்றன. இயல்பாக விசனப்படுகின்றன. மனத்தில் இருந்து வடிவம் பெறுவதற்கு இடையிலான அரிதாரப் பூச்சுகளை அவரது கவிதைகளில் எங்கும் காண முடியவில்லை. அவற்றுக்கு கேமரா கூச்சமும் இல்லை. 

இதன் அர்த்தம் பெருந்தேவியின் கவிதைகளுக்கு வடிவப் பிரக்கைஞை இல்லை என்பதல்ல. கவிதைத் தொழில் நுட்பத்தின் தேர்ச்சி அவரிடம் உண்டு. தன் முன்னோடிக் கவிஞர்களின் வடிவத்திலிருந்து திமிறி எழ வேண்டும் என்ற மூர்க்கத்தை, அவரது தீயுரைத் தூக்கம் தொகுப்பில் வலுவாகக் காண முடியும். தனக்கான புது மொழியை வடிவைக் கண்டடைய வேண்டும் என்ற திணறல் பண்பு பெருந்தேவியிடம் இருந்து என் போன்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சம்.

சில கவிதைகளில் நாம் ஒரு நவீன சிறுகதையை உணர முடியும். நீதி, சுதந்திரம் போன்ற பல்வேறு கற்பிதங்களுக்கு இடையில் சிக்கலாகியிருக்கிற ஆண், பெண் உறவு அவர் கவிதைகளின் முக்கியமான பாடுபொருள். சூழல் விவரிப்பைச் சேர்த்திவிட்டால் கவிதையாக ஆகிவிடக் கூடிய வாய்ப்புள்ள கவிதைகளும் உண்டு. இவை அல்லாமலும் பல வடிவங்களை பெருந்தேவி முயன்று பார்க்கிறார். முத்தம் கொடுங்கள் முத்தங்களாகக் கொடுங்கள் என்ற ஒரு இரு பத்திகளாக சிருஷ்டிக்கிறார். பொதுவாக அவரது கவிதைகளில் அடைப்புக் குறியில் சொற்களைப் பார்க்க முடிகிறது. இது கவிதை வடிவாக்கத்தின் ஒரு உத்திதான். இந்த அடைப்புக் குறியின் மூலம் பொதுப் புரிதலின் மற்றொரு பக்கத்தைக் காட்ட நினைக்கிறார், நீதிக்கான குறியீடாக உள்ள அசோகச் சக்கரத்தின் அந்தப் பக்கத்தில் மறைந்திருக்கும் சிங்க முகம்போல.

கவிதையின் உணர்ச்சியைப் பொறுத்து அவர் வடிவங்களைத் தேர்ந்தெடுக்கிறார். மாறாகக் கவிதைகளை வடிவத்துக்குள் சிறை வைக்க அவர் சுதந்திரம் மனம் விரும்பவில்லை. 


பூமி (நிலம்) என்பது காண்பதன் மூலமாக, தொடு வதன் மூலமாக உணரக்கூடிய ஸ்தூலமான வடிவம். ஆனால், உலகம் என்பது என்ன? நீதிகள், அநீதிகள், உண்மை, பொய் என்பன போன்ற கற்பிதங்களால் உருவாக்கப்பட்டது. இதைப் பெருந்தேவியின் கவிதைக் கிண்டல்கள் மறைமுகமாகச் சொல்கின்றன.

இந்த உலகம் என்னும் கற்பித அமைப்புக்குள்ளே இந்தப் புதிய நூற்றாண்டில் மீண்டும் ஓர் உலகம் உருவாகியிருக்கிறது. அதையும் பெருந்தேவியின் கவிதைகள் கவனித்துப் பதிவுசெய்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் பெருந்தேவி கவிதைகளின் மைய அச்சாக அந்த உலகம் குறித்த அபிப்ராயங்கள் ஆகி இருக்கின்றன. நவீன சமூக வலைத் தள உலகம்தான் அது. இந்த நவீன உலகத்தின் செயல்பாடுகளின் ஓர் அங்கமாக இருந்து பெருந்தேவியின் கவிதைகள் அவற்றை விமர்சிக்கின்றன.

தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஃபேஸ் புக்கில் அறிவித்துவிட்டு இறந்துபோன இளைஞன் குறித்த செய்தியை எல்லோரும் கவனித்திருப்போம். அந்த இளைஞனைப் போன்ற ஒருவன் பெருந்தேவியின் கவிதையில் வருகிறான். கணினித் திரையின் முன் தற்கொலை செய்துகொள்கிறான். இது பதிவாக அல்ல. பெரும் விவாதமாகக் கவிதையில் நடக்கிறது. இந்தத் தற்கொலை, கபாலி படம்போல் சமூக வலைத்தளத்தில் பேசப்படுகிறது. இந்தத் தற்கொலை சரியா, தவறா? அதில் உள்ள நுண் அரசியல் என்ன? அதனால் தேசியவாதம் என்னாகும்? என்பன போன்று கவிதையில் தர்க்கம் நீள்கிறது.


புதுக் கவிதை குறித்த விமர்சனங்களில் முக்கியமானதாகச் சொல்லப்படுவது அவற்றுக்கு உறுதியான லட்சியங்கள் இல்லை என்பது. பாரதிக்கு லட்சியம் இருந்தது. பாரதிதாசனுக்கும் லட்சியம் இருந்திருக்கிறது. 70களில் எழுவந்தவர்கள் சிலருக்கும் லட்சியங்கள் இருந்திருக்கலாம். இந்திய சுதந்திரம், திராவிட அரசியல், மார்க்சிய லெனிய இயக்கங்ககள் இவை எல்லாம் இந்தக் காலகட்டங்களில் வெளியே நடக்கின்றன. இந்தச் சமூக நிகழ்வுகளை, லட்சியங்களை கவிதைகளும் எதிரொலித்தன. எண்பதுகளில் எழுத வந்த சமயவேல் இந்த லட்சியங்களையெல்லாம் போட்டுவிட்டு ரிலக்ஸ்காக சிகரெட் பிடிக்கலாம் என்கிறார். 90-ல் தாரளமயம் வந்துவிடுகிறது.  இப்போது பெருந்தேவி வருகிறார். இருசக்கரத்தின் மூன்றாவது சக்கரமாகி இரவுதோறும் ஓடும் அலுவலனின் “இறுகின கால்களுக்கு இடையில் நசுங்கிச் சுருங்குகிறது கிளிக் குஞ்சு” என்கிறார்.
சமயவேல்

கவிதை எழுதுவதைக் குறித்த கவிதை ஒன்றில், கவிதைகளைக் கூட பெரும் பொறுப்பில் ஆழ்த்தாதே என்கிறார். அரசியல் சரிகளுக்காகக் கவிதை எழுதாதே என்கிறார். அரசியலற்ற, லட்சியங்கள் அற்ற இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் அரசியலைச் சொல்கின்றன இவரது கவிதைகள்.


பெருந்தேவியை நான் பெண் கவிஞர்கள் எனச் சொல்லப்படும் வரிசையில் வைத்துப் பார்க்கவில்லை. அதற்குள் அடக்க முடியாத இயல்பு அவரது கவிதைகளுக்கு உண்டு.  ஆனால் பெருந்தேவியின் கவிதைகளின் மையமாக ஆண்/ பெண் உறவு நிலைகள் இருக்கின்றன.   உடல் உறவுக்கு வங்கிக் கணக்குகளே ஆதாரம் ஆகிவிட்ட சூழலில் பெருந்தேவியின் கவிதைகள் சிறு முத்தங்களைக் கேட்கின்றன. பெண்கள் பல நிலைகளில் வருகிறார்கள். சேலை அணிந்து பார்க்கும் பெண், முலையின் நுனி, மனைவிமார் எல்லோரும் வருகிறார்கள். உறங்கும்போது  குறுஞ்செய்திகள்கூட ஆடைகள் களைவதுபோல நழுவுகின்றன. பெண் தன்னிலையாக இருந்து ஆண்களைப் பார்க்கும் கவிதைகள் இதில் இருக்கின்றன. ஆனால் இந்தக் கவிதைகள் ஆண்களைவிடப் பெண்களையே அதிகமாகக் கிண்டலுக்கு உள்ளாக்குகின்றன. சிறுவன் பெண்ணாக இருந்தாலும், ஆண் அவன் பெண்ணாக இருந்தாலும் என்று சில கவிதைகளில் சொல்கிறார். இந்த ஆண் / பெண்  என உருவாக்கப்பட்டிரும் மன பேதங்களைச் சொல்ல இந்தக் கவிதை முயல்வதாகக் கொள்கிறேன். மற்ற பெண் கவிஞர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது பெருந்தேவி அதை சிருஷ்டிக்கும் விதம்தான். அதில் கூக்குரல் இல்லை. முலைகள், யோனி, உடலுறவுக் காட்சிகள் எல்லாமும் பெருந்தேவியின் கவிதைகளிலும் உண்டு. ஆனால் அவை அதிர்சிக்காக உருவாக்கப்பட்டதில்லை. கவிதையின் தேவை பொருட்டே வெளிப்படுகின்றன. பெருந்தேவிக்குக் கவிதையே பிரதானம்.

மொத்தமாகப் பார்க்கும்போது பெண் மையக் கருத்து என்னும் ஒற்றைத் தளத்தில் நிறுத்திவிடாமல் இரண்டாயிரம் ஆண்டுக் கவிதைப் பாரம்பரியத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய ஒரு கவி ஆளுமை எனப் பெருந்தேவியைச் சொல்லலாம்.