
(என்னுடைய நாட்கள் அவிழும் கீயூபீப் ராயல் சாலை. மொரிசீயஸ்)
அழகாகக் கடந்து கொண்டிருக்கின்றன
என்னுடைய நாட்கள்
எளிய உடற்பயிற்சி
உடலினை உறுதி செய்கிறேன்
காய்கறிகளை வேகவைத்து
சிறப்பான காலை உணவு
கண்ணாடியின் உதவியின்றி
முகம் காண்கிறேன்
சிரமமில்லாத பணியை மேற்கொள்கிறேன்
எல்லோருக்கும் சிறிய புன்னகையை அளிக்கிறேன்
ஒரு சொல் ஓராயிரம் மூச்சுக்கிணையானது என்ற
பழைய பள்ளிப் பாடலை மனதிற்குள்ளே முணுமுணுத்துக் கொள்கிறேன்
என்னுடைய இந்த எளிய நாளில்,
கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு
ஒரு சிறிய வன்முறை கூட நிகழ்வதில்லை
காதல், ஏமாற்றம், தோல்வி, வெற்றி
ஒரு சிறிய மன உளைச்சல் கூட ஏற்படுவதில்லை
சின்னஞ்சிறிய பறவைகள்
பேசிக்கொண்டிருக்கின்றன
ஒரு புறா உணவருந்துகிறது
மீன் குஞ்சுகள் ரொட்டித் துண்டை
கவ்விச் செல்கின்றன
மரங்களை காற்று தாலாட்டுகிறது
ஒரு நாய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது
இயங்கிக் களைத்த வெயில்
நிழல்களில் இளைப்பாறுகிறது
வசீகரம் சூடிய ஒரு சூரியன் மறைகிறது
புதிய வண்ணம் கொண்டு ஒரு சூரியன் உதிக்கிறது
மேலும் என்னுடைய நாளுக்குள் வரும் நீங்கள்
முற்றிலும் ஆதரவற்று தளிர்விட்டிருக்கும்
சிறு செடிகளைக் காணலாம்
அவற்றில் நம்பிக்கையாய் மலர்ந்திருக்கும் எளிய பூக்களைக் கொய்து
உங்கள் நாளையும் அழகாக்கிக் கொள்ளலாம்
16 comments:
Powers of Positive thinking...
கழுவிடப்பட்ட கீயூபீப் ராயல் சாலை போல ஆகிவிட்டது மனம்... :)
(நேற்று முழுவதும் மனம் பாதிக்கப்பட்டு கிடந்தேன்.. முக்கியமாக வெந்தும் வெகாமலும் 7 வயது குழந்தையை தூக்கி கொண்டு ஓடியே ஜவானை டீவியில் பார்த்ததிலிருந்து... )
நல்லா வந்திருக்கு.. மண்குதிரை.. ரொம்ப நாள் ஆச்சு போல... பரவாயில்லை... நாட்கள்போனால் என்ன.. நல்ல கவிதைகளோடு மட்டும் வா..கவிஞனே.. நிறைவு
வாங்க நண்பரே ...
----------------
கண்ணாடியில்லாமல் முகம் பார்க்கிறேன் - எனக்கு மிகவும் பிடித்த விடயம்.
----------------
இன்னும் அந்த துயர சம்பவத்திலிருந்து மீல இயலவில்லை :(
மிக இனிமையாக உணர்கிறேன் மண்குதிரை :)
நல்லாருக்கீங்க போல மண்குதிரை!
(நல்லாருக்கீங்களா மண்குதிரை என கேட்க வந்து, நானே பதில் எடுத்துக்கிட்டேன். :-))
உங்கள் வார்த்தைகள் புத்துண்ர்ச்சி ஊட்டும் டானிக்!பூங்கொத்து!
கவிதை நல்லா இருக்கு மண்குதிரை. எங்கே ரொம்ப நாளா காணோம் உங்களை.
மனசுக்கு இதமா இருக்கு மண்குதிரை....ரொம்ப நாள் கழிச்சு பார்க்கும் நண்பனைப் போல ஆசுவாசப்படுத்துது உங்க கவிதை......நீங்களும் ரொம்ப நாள் கழிச்சு தான் வந்திருக்கீங்க....மிக மகிழ்ச்சி...
-ப்ரியமுடன்
சேரல்
எத்தனை சந்தோஷமாக இருக்கு படிக்க ..இந்த நினைவுகளோடவே போகவேண்டாம் என்று நினைத்த அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டேன் ..நன்றி நன்றி
மனதுக்கு இதமாக இருக்கிறது நண்பரே ஏனோ மென்சோகமும் கவிழ்கிறது
சந்தோசம் , மகிழ்ச்சி !!!
நிறைவான ஒய்வு போல ;)
வெகுநாள் கழித்து பார்த்த நண்பனை கண்ட உணர்வு ...
மனம் போல வாழ்வு என்பதும் உண்மைதானே அண்ணே ? :)
வெகு அருமை நண்பா..
ரொம்ப நல்லா இருக்குங்க மண்குதிரை.
ஒரு அழகான மனநிலை இன்று உங்கள் கவிதையில் கிடைத்தது.
இவ்விரு வரிகள் அருமை.
//இயங்கிக் களைத்த வெயில்
நிழல்களில் இளைப்பாறுகிறது//
எங்கே போய்டீங்க? தொடர்ந்து எழுதுங்க... :)
Super!!
Thanks!
நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்
தற்போது இணையத்தில் தொடர்ந்து இயங்க முடியாத சூழலில் இருப்பதால் தங்களோடு உறவாட இயலவில்லை நண்பர்களே
//உங்கள் நாளையும் அழகாக்கிக் கொள்ளலாம்
//
சரிங்க நானும் வர்றேன்
Just beautiful !
Post a Comment